கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட்; விளையாட்டரங்கில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட தம்புள்ளை அணிக்கும் கொழும்பு அணிக்கும் இடையிலான (National Super League) 4 கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (09) வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி முதலாவது இன்னிங்ஸில் வெற்றியீட்டியது.
இரண்டாவது இன்னிங்ஸில் தம்புள்ளை சார்பாக நிஷான் மதுஷ்க, கவின் பண்டார ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் சதங்கள் குவித்தமை விசேட அம்சமாகும். இந்த சுற்றுப் போட்டியில் முதலாவது சதத்தைப் பெற்ற பெருமை நிஷான் மதுஷ்கவை சாருகிறது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, நிஷான் மதுஷ்க, தனுக்க தாபரே, அஞ்சல பண்டார ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பபெடுத்தாடிய கொழும்பு அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 390 ஓட்டங்களைப் பெற்றது.
சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சார்பாக ஐவர் அரைச் சதங்கள் குவித்தனர்.
துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆர். பிரேமதாச ஆடுகளத்தில் இரண்டு சதங்களும் 8 அரைச் சதங்களும் குவிக்கப்பட்டன.
