மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று காலை பாடசாலையில் வைத்து ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை அடுத்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(25) காலை இடம்பெற்றுள்ளது.
கிரான்குளம் 8 ஆம் பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.தர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் இராஜன் வினோஜினி என்ற 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வழமைபோல சம்பவதினமான இன்று பாடசாலைக்குச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் வாந்தி எடுத்து மயக்கமுற்றதால்
மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர் காவுவண்டி மூலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

