கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!

அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (GRTA) நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்போது, ​​எக்ஸ்ரே பரிசோதனைகள், CT ஸ்கேன்கள், MRI ஸ்கேன்கள், மேமோகிராம் ஸ்கேன்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிலையங்களில் கதிர்வீச்சுப் பயன்பாடு தொடர்பான அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து கதிரியக்கவியல் தொடர்பான சேவைகளும் நிறுத்தப்படும் என தர்மவிக்ரம ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனவரி 21 அன்று நடத்தப்பட்ட ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து அதிகாரிகள் சரியான தீர்வை வழங்கத் தவறியதால் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மாளிகாவத்த வைத்தியசாலையில் தகுதியற்ற பணியாளர்கள் நோயாளர்களுக்கு கதிரியக்க பரிசோதனைகளை நடத்துவதாகக் கூறப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பும் வகையில் இந்த
பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்ப்படுவதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய அதிகாரிகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை மற்றும் தகுதிவாய்ந்த கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அத்தகைய நடைமுறைகளில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தர்மவிக்ரம எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *