கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இ.போ.ச. பஸ் விபத்து

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை இடம்பெற்றுள்ளது.

 

குறித்த பஸ் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டால் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

இந்த விபத்திற்கு பஸ் வண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணமென கூறப்படுகின்றது.

 

விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் சேவையிலீடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அண்மைக்காலமாக மக்கள் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளே விபத்துக்குள்ளாவதுடன் பெருமளவான உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் உரிய பராமரிப்பின்றி சேவையிலீடுபடுத்தப்படுவதால் அண்மைக்காலமாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமென தெரிவிக்கும் மக்கள் பொதுப்போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *