இலங்கைக்கு விமான சேவையை வழங்கும் உலகின் மிகப்பழமையான சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான குவைத் எயார் வேஸ், இரண்டு வருட கால கூட்டுச் சேவைக்குப் பின்னர் கொழும்புக்கான தமது நேரடி விமான சேவையை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.
குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் எயார் வேஸ், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகள் கூட்டுச் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குவைத் எயார்வேஸ் முதன்முதலில் 1978ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்தது.இந்நிலையில், குறித்த நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்கும் வகையில் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முதலாவது விமானத்துக்கு நீர்த்தாரை பீச்சி, வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை சுற்றுலாத்துறையின் சார்பில் கண்டிய நடனம் மற்றும் சிலோன் தேயிலைப் பரிசுகள் வழங்கி விமானப் பயணிகள் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் குவைத் ஏர்வேஸ் தரப்பினர் இந்த நிகழ்வைக் கேக் வெட்டி, நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டாடினர்.
தற்போது ஆரம்பித்துள்ள நேரடி விமான சேவையினூடாக, அதிநவீன எயார் பஸ் ஏ320 நியோ விமானங்களைப் பயன்படுத்தி வாரத்துக்கு நான்கு விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
இந்த மீள் விமான சேவை ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதுடன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் நியூ யோர்க் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட விமான நிலைய ங்களுக்கு இலகுவான இணைப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

