புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்து–தொடருந்து சேவைகள்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்கப் போக்குவரத்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையினால் (SLTB) முன்னெடுக்கப்படும் விசேட பேருந்து சேவைகள் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
நீண்ட தூரப் பயணங்களுக்காக நாளாந்தம் சுமார் 250 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகளை உடனுக்குடன் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சேவை ஏப்ரல் 09 முதல் 13ஆம் திகதி வரை முதற்கட்டமாக நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, புத்தாண்டின் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக ஏப்ரல் 17 முதல் 21ஆம் திகதி வரை விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், தனியார் பேருந்து சேவைகளை ஒழுங்குபடுத்தும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, ஏப்ரல் 09ஆம் திகதி முதல் தனது விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவு மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, இலங்கை தொடருந்து திணைக்களம் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக, கடலோரப் பாதை, வடக்குப் பாதை மற்றும் பிரதான பாதை ஆகியவற்றில் பல விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் பொதுமக்கள் நெரிசலற்ற முறையில் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *