இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்கள் – ஜனாதிபதி இடையே சந்திப்பு!

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் குறிப்பாக அந்த நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போரில் சம்பந்தப்படாத மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தனது கவலையை தெரிவித்ததுடன், அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறிப்பாக வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைக்கும் அந்நாடுகள் வழங்கும் பங்களிப்பை இதன்போது பாராட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தி செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேபோன்று, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தனி நாடாகவும், ஒன்றிணைந்தும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இலங்கை  வழங்கக்கூடிய அதிகப்பட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *