பதினைந்து வருடகாலமாக கஞ்சா வியாபாரம் செய்த நபர் நேற்று(14) இரவு ஏறாவூர்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பொலிஸார் செங்கலடி பிரதேசத்தில் நேற்று மேற்கொண்ட தேடுதலின்போது கேரள கஞ்சா மற்றும் பெருந்தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
36 வயடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிசமந்த சிறிவர்தன தெரிவித்தார்.
இவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் தேடுதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் சிறிய பக்கெட்டுக்களில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த நூறு கிராம் கேரள கஞ்சா ஆகியன வீட்டிலுள்ள பூஜை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர்ப் பொலிஸாரின் விசேட பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத்தகவலையடுத்து இத்தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பிரதேசத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜறூல் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பிரதம பொலிஸ் பரிசோதகர் நிரோசன் பெணாந்து , பொலிஸ் சார்ஜன்ட் சரத் விஜயசேன (4950030), பொலிஸ் சார்ஜன்ட் எச்எம்யுபீ. ஹேரத் (67318) , பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிஜிஎன். பிரதீப் குமார (87111) , ஆர். ஹம்சா (105107) , கே.எம்எம்எஸ். சேனவிரத்ன (102719) மற்றும் மகளிர் பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ். ரேனுகா (12112) ஆகியோருடன் பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினரும் இத்தேடுதலில் கலந்து கொண்டனர்.

