உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்தி 554 உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளில் இருந்து பட்டியல் வேட்பாளர்களுடன் சேர்த்து 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அனைத்து அரச அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு (24) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 447 வாக்களிப்பு நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்ற வாக்குகள், 144 வட்டார தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு வாக்குகள் எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
தபால் மூல வாக்கு எண்ணும் பணிகளுடன் இணைந்ததாக இறுதி தேர்தல் முடிவு வட்டார தேர்தல் எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

