ராஜபக்ச குடும்பத்தின் நிழல் அதிகாரி சுரேஷ் சலேயின் கைது மர்மம்!

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே என்பவர், வெறும் ஒரு புலனாய்வு அதிகாரி மட்டுமல்ல அவர் ராஜபக்ச குடும்பத்தின், குறிப்பாகக் கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நிழல் அதிகாரியாகவே பார்க்கப்பட்டார்.

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளமை, ராஜபக்சக்கள் மீதான ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் அரசியல் சதித்திட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளது.

இது ராஜபக்சக்களுக்குப் பாரிய அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மற்றும் அவரது குழுவினருக்கும், சுரேஷ் சாலே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் இருந்த மர்மமான தொடர்புகள் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரியவை.

இது குறித்துப் பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா, சர்வதேச ஊடகமான செனல்-4 இல் வழங்கிய சாட்சியத்தின்படி, தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையிலான சந்திப்புகளை ஒருங்கிணைத்ததில் பிள்ளையான் தரப்புக்கும் சாலேக்கும் முக்கிய பங்கு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப் பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்ற கேள்விக்கு விடை தேடும் பயணத்தில், சுரேஷ் சாலே ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.

இதுமட்டுமன்றி, தர்கா நகரில் நடந்த தாக்குதல்கள் மற்றும் வவுணத்தீவில் காவல்துறையினரைக் கொலை செய்தமை போன்ற விடயங்களிலும் சுரேஷ் சாலேவின் தலையீடு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ராஜபக்சர்களை ஆட்சிபீடம் ஏற்றவேண்டிய ஒரு கட்டாய சூழலில் அவர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *