கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத் தலைவர் தங்கவேல் சிறிதரன் தலைமையில் வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று (25)  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:

  • சம்பள முரண்பாடு: அரச சேவைக்கும் பல்கலைக்கழக சேவைக்கும் இடையே நிலவி வந்த சம்பள விகிதத்தைப் படிப்படியாகக் குறைத்த முறையைத் திருத்தி அமைக்க வேண்டும்.
  • ஊக்குவிப்பு கொடுப்பனவு : 45 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாகக் குறைக்கப்பட்ட மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை, ஏற்கனவே உடன்பட்டபடி 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
  • விசேட கொடுப்பனவு: தவறான விளக்கங்களின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட 20 சதவீத விசேட கொடுப்பனவை மீண்டும் வழங்க வேண்டும்.
  • மேலதிக நேரக் கணக்கீடு : ஜனாதிபதி அறிவித்த முறைக்கு மாறாக, தற்போது 240-ஆல் வகுக்கப்படும் மேலதிக நேரக் கணக்கீட்டு முறையை மாற்றி, பழையபடி 160-ஆல் வகுக்கும் முறையை அமுல்படுத்த வேண்டும்.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள்: ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகளை அதிகரித்தல், தையல் கூலி மற்றும் கடன் எல்லைகளைத் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப உயர்த்துதல், நியமன நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சீர்செய்தல் மற்றும் இடர் கடன் சுற்றறிக்கையைத் திருத்துதல்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சியில் இருந்தபோது எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அதனைத் தர மறுக்கிறார்கள். ஜனாதிபதி பாதீட்டில்  கொடுப்பனவுகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்தும், திறைசேரி அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர். பல அறிக்கைகளைச் சமர்ப்பித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *