உணவட்டுன – பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவரின் 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்து சில மணித்தியாலங்களுக்குள் விரைவாகச் செயற்பட்ட அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் தமது அறையில் மறைத்து வைத்திருந்த கெமராவொன்றில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த விடுதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 19 வயதுடைய குறித்த இளம்பெண், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (24) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

