தனது குடும்பத்தை பற்றி மனம் திறந்து பேசிய சாலினி!

நடிகர் அஜித் குறித்து ரசிகர்கள் அறிந்திராத பல தனிப்பட்ட விஷயங்களை, சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை ஷாலினி பகிர்ந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது.

‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்தபோது அஜித் – ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்தது. குடும்ப சம்மதத்துடன் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிய ஷாலினி, குடும்பப் பொறுப்புகளை ஏற்று அஜித்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டியில்கூட “ஷாலினி எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்” என அஜித் உருகியிருந்தார்.

தற்போது அஜித் கார் ரேஸிங் மீது முழு கவனம் செலுத்தி உலகின் பல நாடுகளில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அவர் பங்கேற்கும் பந்தயங்களுக்கு ஷாலினி மற்றும் குழந்தைகள் செல்லுவது வழக்கமாக உள்ளது. ரேஸுக்கு முன் ஷாலினியின் நெற்றியில் முத்தமிட்டு தான் பந்தயத்திற்கு செல்லும் பழக்கம் அஜித்துக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஷாலினி, சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த விழாவில் அஜித்தின் தனிப்பட்ட குணங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அஜித் செய்யும் பிரியாணி மற்றும் வீட்டிலுள்ள அவரது இயல்பு குறித்து பதிலளித்த ஷாலினி, “இந்த வீடியோவில் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் வீட்டிலும் ஜாலியாக இருப்பார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். சமையல் செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஐந்து, ஆறு பேருக்கு மட்டுமல்ல, நூறு பேருக்குக்கூட அவர் பிரியாணி செய்திருக்கிறார். யாராவது வீட்டுக்கு வந்தால் ‘சாப்பிட என்ன செய்யட்டும்?’ என்பதுதான் அவர் முதலில் கேட்பார்,” என்றார்.

மேலும், தனது குழந்தைகள் குறித்து பேசும்போது, “என் குழந்தைகள் இதுவரை என்னுடைய எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் பார்க்கலாம் என்று சொல்லி பிறகு தள்ளி வைக்கிறார்கள். சமீபத்தில் என் மகள் ‘அலைபாயுதே’ படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். ஆனாலும், இன்னும் பார்க்கவில்லை. என் மகனிடம் ‘அமர்க்களம்’ படத்தில்தான் உன் அம்மாவும் அப்பாவும் முதலில் சந்தித்தோம், அதையாவது பார்’ என்று சொன்னேன். அதையும் அவர் பார்க்கவில்லை” என சிரித்தபடி கூறினார்.

ஷாலினியின் இந்த மனம்திறந்த பேச்சு, அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *