கண்டியில் நடைபெற்ற விறுவிறுப்பான சூப்பர்-8 போட்டியில், இங்கிலாந்து அணி இலங்கையை 51 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பில் சால்ட் (Phil Salt) அதிரடியாக 62 ஓட்டங்களை விளாசினார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
147 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக்க 30 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகளையும், லியாம் டாசன் மற்றும் ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி சூப்பர்-8 சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

