முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

 

தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (22) ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறும், நிரந்தர நியமனம் வழங்குமாறும் குற்றஞ்சாட்டி, மலையக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியம் இன்று ஹட்டன் ரயில் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை காரணமாக தாம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முன்பள்ளி ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளை நேரடியாக நிர்வகிப்பதன் காரணமாக, தோட்டப்புற மாணவர்களுக்கு முறையான ஆரம்பக் கல்வி வழங்குவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், முன்பள்ளிகளை நிர்வகிக்கும் உரிமை தோட்ட நிர்வாகங்களுக்கு யார் வழங்கினர் என கேள்வி எழுப்பிய அவர்கள், அரசின் கீழ் இயங்கும் மாகாண சபைகளே தோட்ட முன்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் என சுட்டிக்காட்டினர்.

இவ்விடயத்திற்கு விரைவான தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *