அக்கரைப்பற்றில் உயிரிழப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், O/L பரீட்சையை எழுதுவதற்கு அனுமதிக்குமாறு – நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த பைறோன் மீது காரை மோதி, உயிரிழப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு – அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரமில்லாத மேற்படி 16 வயது சிறுவன் செலுத்தி வந்த கார், கடந்த 10ஆம் திகதி இரவு அக்கரைப்பற்றைச் சேர்ந்த பைறோன் மீது மோதியதில் அவர் மரணமடைந்தார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மேற்படி சிறுவனை நேற்று(16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறுவன், நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், இன்று(17) ஆரம்பமான – க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதிக்குமாறும் உத்தரவு வழங்கினார்.
இதேவேளை, குறித்த சிறுவனுக்கு வாகனத்தை வழங்கிய உரிமையாளரை பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லை எனும் விடயம், பாதிக்கப்பட்டவர் தரப்பினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த மேற்படி சிறுவன் – பாடசாலை சார்பாக க.பொ.த சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றுயுள்ளார்.

