விஜய் அண்டனியின் பூக்கி பட விமர்சனம்!

விஜய் அண்டனியின் தயாரிப்பு + இசை + படத்தொகுப்பு+ சிறப்பு தோற்றம்+ என பங்களிப்பு செய்திருக்கும் படம்… விஜய் அண்டனியின் உறவினரும், ‘மார்கன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவருமான அஜய் தீஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம்… ஜென் ஜீ தலைமுறையினரிடையே பிரபலமான பூக்கி எனும் கொமர்சியலான டைட்டில்… இவை தந்த எதிர்பார்ப்புகளால் ‘பூக்கி ‘ திரைப்படத்தைக் காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு எம் மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.

கைலாஷ் ( அஜய் தீஷன்) – ஆழி ( ஆர் கே தனுஷா) ஆகிய இருவரும் ஆறாண்டுகளாக காதலித்து வருகிறார்கள். உணர்வுபூர்வமான தருணத்தில் பொதுவெளியில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த எண்ண.. அதனால் கைலாஷ் உணர்வை கட்டுப்படுத்த தெரியாமல் கோபத்தில்  வன்முறையை நிகழ்த்த.. அதை சமூக ஊடகங்கள் தங்களுடைய வக்கிர மனதால் நெய் ஊற்ற.. இருவரும் பிரிகிறார்கள். அந்த பிரிவிலிருந்து தங்களை மீட்டெடுத்துக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதும் .. பிரிந்த காதலர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பதும் தான் இப்படத்தின் கதை.

பிரேக் அப்பிற்கு பிறகு காதலனும்,  காதலியும் தங்களை இயல்பாக்கிக் கொள்வதற்காக.. அவர்கள் தெரிவு செய்யும் விடயங்கள் அனைத்தும் கொமர்சல் அம்சங்கள். காதல் குறித்து காதலர்களின் பார்வையும், கோணங்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டாலும் அடிநாதமான காதல் உணர்வு எந்த காலகட்டத்திலும் மாறுவதில்லை என்பதை உச்சகட்ட காட்சியில் இயக்குநர் விவரித்து இருப்பதும் பூக்கியாக இருக்கிறது.

கைலாஷ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் தீஷன்‌-  தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு இளமையான வரவு. நடிப்பும், குரலும் தனித்துவமாக இருப்பதால் தமிழ் சினிமாவில் தடம் பதிப்பார் என உத்திரவாதம் தரலாம்.

ஆழி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஆர் கே தனுஷா-  சுமார் மூஞ்சி குமார்களின் கனவு தேவதையாக வலம் வரக்கூடும். நடிப்பில் முத்திரை பதிப்பது போல் நடனத்திலும் தன் அடையாளத்தை பதித்திருப்பதால் பொறுமையுடன் அழுத்தமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்தால் விருதுக்குரிய நடிகையாக உயரலாம்.

இவர்களைக் கடந்து திரைக்கதையின் சுவராசியத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கும் பாண்டியராஜன், சுனில், அஸ்வின் ராம், இந்துமதி மணிகண்டன் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

முதல் பாதியில் நான்கு பாடல்கள் வைத்து ஒரு பிரிவு ரசிகர்களை சோதித்திருக்கிறார்கள். சிலர் மூன்று பாட்டுகள் வரை ‘தம்’ கட்டி தாக்கு பிடித்தனர். நான்காவது பாட்டு வந்தவுடன் தங்களின் செல்போனை பார்க்கத் தொடங்கி விட்டனர்.  இயக்குநர் ஒளிப்பதிவாளர் என்பதால்.. காட்சியை உரையாடலுடன் விவரிக்காமல்…  கவிதையுடன் கூடிய காட்சி மொழியாக விவரிக்க நினைத்து உழைத்திருக்கிறார். ஆனால் அது ரசிகர்களுக்கு மாண்டேஜஸ் ஆக மட்டுமே கடத்தப்பட்டிருப்பதால்… முதல் பாதி ஆர்வத்தை விட… வியப்பை விட… பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் காதலர்கள் தங்களை மீட்டு எடுத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் காட்சிகள் விறுவிறுப்பாக சுவாரசியத்துடன் தொகுக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம் குறைகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு- பாடல்கள் – பின்னணி இசை – வலிமை சேர்த்திருக்கிறது.

காதலில் ஏற்படும் பிரிவின் நுட்பத்தை உணர்வுபூர்வமாக விவரித்திருந்தாலும்…  பார்வையாளர்கள் யூகிக்க இயலாத வகையிலான காட்சி அமைப்பு இல்லாததால்… வழக்கமான காதல் கதையாக கடந்து செல்கிறமை குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *