ஓட்டமாவடி பிரதேச சபையின் காவத்தமுனை (காகித நகர்) வட்டார உறுப்பினர் அஸ்கரின் வேண்டுகோளுக்கமைய, மஜ்மா கிழக்கில் மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் மீராசாஹிப் ஹலால்தீன் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது.
நீண்டகாலமாக போதிய அடிப்படை வசதிகளின்றிய பின்தங்கிய கிராமப்பகுதியாகக் காணப்படுவதுடன், குறிப்பாக, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகமுள்ள அபாயகரமான பிரதேசமாகவும் இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் நிலவும் கடும் இருளால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களையும் பாதுகாப்பு அச்சங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில், பிரதேச மக்களின் நீண்டநாள் கோரிக்கையையும் பாதுகாப்புத்தேவையையும் கருத்திற்கொண்டு, பிரதேச சபை உறுப்பினர் அஸ்கர் இவ்விடயத்தை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, தவிசாளர் ஹலால்தீன் வழிகாட்டலில் மின்விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பிரதான வீதிகள், உப வீதிகள் மற்றும் யானை நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் அடையாளங்காணப்பட்டு, அவற்றில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
இதனால், இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை தொடர்பாக, மஜ்மா மக்கள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததுடன், பிரதேசத்தின் பாதுகாப்பு, சமூகநலன் மற்றும் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி செயற்படும் பிரதேச சபை நிர்வாகத்திற்கும், தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

