மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த  முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா , தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) போது, கட்சியின் தீர்மானத்தை மீறி ஆளும் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தார். இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்த மாநகர சபை உறுப்பினர் பதவியும் வெற்றிடமானது.
உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 10A(1)(a) பிரிவின் கீழ், கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி அத்திகலவினால் (Piumi Attygalle) இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2026 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதியிடப்பட்ட 2475/05 இலக்க விசேட வர்த்தமானி மூலம், திருமதி சுஹரா புகாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இல்லாது போனமையால், அவரது மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *