முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் உயிரியல் அடிப்படைக்கு புறம்பாக விருப்பத்திற்கேற்ப அறுவைசிகிச்சை மூலம் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமை தொடர்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள கடந்த அரசாங்கங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சார்பில் சட்ட மாஅதிபருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற உறுப்பினரான சாந்த ஜயதிலகவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரித்தி பத்மன் சூரசேன, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய  உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒருவார காலத்திற்குள் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

வழக்கு எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிரியல் அடிப்படையை பொருட்படுத்தாமல் மருத்துவ அறுவைசிகிச்சை மூலம் ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக்கொள்ள சட்டபூர்வ இயலுமை கிடையாது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் உளநல மருத்துவவரின் பரிந்துரை சான்றிதழின் அடிப்படையில் ஒருவர் தனது பாலின அடையாளத்தை அறுவைசிகிச்சை மூலம் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

2016ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டல் கோவைக்கு அமைய இதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாலின மாற்றத்திற்கு உட்படுபவர்களுக்கு புதிய பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் பாலின மாற்றங்களை உட்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒருவரின் பாலியல் அடையாளத்தை மாற்றுவது ஓரின திருமணங்களுக்கு வழிவகுக்கும் எனவும் இது சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பிற்கமைய பொதுமக்கள் கருத்துக்கணிப்பு இன்றி பாலினத்தை மாற்றிக்கொள்வது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத செயற்பாட்டுக்கு இடமளிப்பதனூடாக பிரதிவாதிகள் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதற்கமைய உயிரியல் அடிப்படையை பொருட்படுத்தாமல் விரும்பியபடி அறுவைசிகிச்சையின் மூலம் ஒருவரின் பாலின அடையாளத்தை மாற்றுவதற்கான சாத்தியத்தை அனுமதித்து வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்களையும் வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், மகளிர் விவகார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *