போக்குவரத்திற்கு இடையூறான கால்நடைகள் மடக்கிப்பிடிப்பு

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்கும் கால்நடைகளால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன.

இதனைத்தடுக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேச எல்லைக்குட்பட்ட வீதிகளில் கால்நடைகளை மடக்கிப்பிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இந்த நடவடிக்கையின் போது மாடு, கன்றுகள் என மொத்தமாக 65 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக மக்களிடம் பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கட்டுப்படுத்த தவறியிருந்தனர். இதனால் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கால்நடைகளை மீட்டுக்கொள்ள உரிமையாளர்கள் ஒருவர் ஒரு கால்நடைக்கு 10,000 ரூபா தொகையை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதிகளில் கால்நடைகள் நிற்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்கவும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தவிசாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *