சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்திகிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி!

இலங்கையின் 78ஆவது சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி புதன்கிழமை (04) அன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள்,தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.

இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதோடு,தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியவாறு,பாதைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு “சிங்ககொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனக் கோஷங்களை எழுப்பியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோதுA-09பிரதானவீதியின் ஒரு பக்க வழித்தடத்தில் வீதிப் போக்கு வரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *