ஜனாதிபதியின் அழைப்பிற்கு இணங்க அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்கள் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்த மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், எனவே ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். (a)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *