சித்தர்களின் குரல் சமஸ்தானத்தினால் ஊடகவியலாளர் உதயகாந்திற்கு கௌரவம்

சித்தர்களின் குரல் சமஸ்தானத்தினால் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய “சாமஸ்ரீ தேசமானிய” உதயகாந்திற்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வேலோடு மலையில் பதினெண் சித்தர்கள் சன்னிதியில் சாபநிவர்த்தி செய்து பெறப்பட்ட சஞ்சீவினி மூலிகைகளைக் கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நேற்று(20) இரவு நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் குழுவினரின் தலைமையில் சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் சர்வதேச ஆலோசகர் சிவசங்கர் ஜீயின் ஏற்பாட்டில் மூலிகை குளியலுடன் ஆரம்பமாகி, 18 சித்தர்கள் சந்நிதியில் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, யோக ஆற்றல்களைக் கூட்டும் சத்ரு சம்ஹார வேல் பூஜை என்பன இடம்பெற்றது.

வேலோடுமலை முருகன் ஆலயத்தின் தர்மகர்த்தா தியாகராஜ சுவாமிகள் மற்றும் சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் இலங்கைக்கான தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், போசகர் மகேஸ்வரன் சுவாமிகள், நமசிவாயம் சுவாமி, வேல் சுவாமி, சித்தர்களின் குரல் ஊடகவியலாளர் விபுலமணி சகாதேவராஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

இதன் போது சித்தர்கள் குரல் சமஸ்தானத்தினால் உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகனின் அளப்பரிய கலைச்சேவையினையும், வேலோடுமலை முருகன் ஆலயத்தின் தர்மகர்த்தா தியாகராஜ சுவாமிகளின் அளப்பரிய சேவையினையும், சித்தர்களின் குரல் ஊடகவியலாளர் விபுலமணி சகாதேவராஜா மற்றும் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய உதயகாந்த் ஆகியோரின் சேவையினையும் பாராட்டி, பொன்னாடை போர்த்தப்பட்டு, மலர் மாலை அணிவித்து, ஆன்மீக ரீதியான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *