எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான நேற்று (22) சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்களை அவர் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கையின் சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் எஸ். சந்திரா தாஸ் மற்றும் பேட்ரிக் டேனியல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதில் இரு தரப்பினரும் சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
1950 மற்றும் 1960களில் சிங்கப்பூர் இலங்கையின் வளர்ச்சி நோக்குநிலையைப் பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்து, தற்போது காணப்படும் விரைவான வளர்ச்சியை அடைந்தது.
ஆனால் இன்று இலங்கை வெற்றியின் முன்மாதிரியாக சிங்கப்பூரைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
ஒரு நாடாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று, சமூக-பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதார சேவைத் துறைகளில் சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றத்திலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து அமைச்சர் கே. சண்முகம் கருத்துத் தெரிவிக்கையில், தனது தேசம் விரைவான முன்னேற்றத்தை அடைவதற்கு நீண்டகால நோக்கத்துடன் செயல்பட்டது என்றும், சிங்கப்பூர் கணிசமான சவால்களை எதிர்கொண்டது, தூரநோக்குத் திட்டமும், ஆட்சி குறித்த மரபுவழி முடிவுகளும், பிரதமர் லீ குவான் யூவின் உறுதியான தலைமையும், துணிச்சலான முடிவெடுத்தலும் மூலம் நாடு புதிய பாதையில் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்கால வெற்றி தேசிய ஒற்றுமை, நிறுவன ஒருமைப்பாடு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒழுக்கமான, நீண்டகால நோக்கத்தைப் பின்பற்றுவதில் தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூரின் முன்மாதிரியிலிருந்து உத்வேகம் பெறுவதன் மூலம், இலங்கைக்கு ஸ்திரத்தன்மை, செழுமை மற்றும் சமூக முன்னேற்றம் நோக்கிய நிலையான பாதையை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்

