ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியத்தில் சர்ச்சை – சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவரை விடுவித்த சம்பவம் தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

 

குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

 

அந்தவகையில் இச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அடையாளம் கண்டு, குற்றவாளிகள் மீது தேவையான ஒழுக்காற்று அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அத்துடன் சீர்திருத்த நடவடிக்கைகளில் அவதானம் செலுத்தி, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் வேண்டும்.

 

சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஜனாதிபதி, நீதி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுக்கு முழு ஆதரவை வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தயாராக இருப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடனும் நியாயத்துடனும் மக்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்வதற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *