பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயராது!

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளினால் தேசிய மட்டத்தில் எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ள போதிலும், எதிர்க்கட்சிகளே அதனை அறியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்கமைய, கோதுமை மா உட்பட இனிப்பு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்று உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை, தொடர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.
எனினும், லாப்ஃஸ் கொள்கலன் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இல்லாவிடின் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை லாப்ஃஸ் எரிவாயு நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, லாப்ஃஸ் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் நிறுவனம் சந்தைக்கு தடையின்றி தமது உற்பத்திகளை வழங்காவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *