சிசிரிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்: அக்கரைப்பற்றில் இளைஞர் கைது!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிசிரிவி கமரா பொதிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், இனந்தெரியாத நபரொருவரால் பொதியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியில் தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அக்கரைப்பற்றில் உள்ள நபரொருவர் இதனைப் பெற்றுக்கொள்வார் எனப் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தல் குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 3:00 மணி முதல் நகர்ப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்ததும், பொதியில் இருந்த தொலைபேசி இலக்கத்திற்குப் பேருந்து நடத்துனர் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது, பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக வந்த 20 வயதுடைய இளைஞரை அங்கிருந்த பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து மீட்கப்பட்ட சிசிரிவி கமராவினை  சோதனையிட்டபோது, அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டறியப்பட்டது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இக்கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *