ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் இங்கிலாந்து பயிற்சி மருத்துவர்கள்!

அரசாங்கத்தின் ஊதிய உயர்வை நிராகரித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் ஏப்ரல் மாதம் ஆறு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் தேசிய சுகாதார சேவையில் நிலவும் ஊதியம் மற்றும் பணியாளர் பற்றாக்குறை தொடர்பான நீண்டகாலப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தங்களின் ஊதியக் கோரிக்கைகள் மற்றும் வேலைப் பற்றாக்குறை குறித்த கவலைகளைக் நிவர்த்தி செய்ய அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்காததால் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

திட்டமிடப்பட்ட இந்த வேலைநிறுத்தம், இங்கிலாந்தில் ஈஸ்டர் வங்கி விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 7 ஆம் திகதி காலை 7 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் திகதி காலை 6.59 மணி வரை முடிவுக்கு வரவுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் நடத்தும் 15 ஆவது வேலைநிறுத்தப் போராட்டம் இதுவாகும்.

இந்த வேலைநிறுத்தத்தால் தேசிய சுகாதார சேவைக்கு 300 மில்லியன் பவுண்டுகள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *