எவ்வாறான நெருக்கடிகளையும் சந்திக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது கேண்களில் எரிபொருள் வழங்குவது தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சகல எரிபொருள் நிலையங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சிலர் எரிபொருள் நிலையங்களில் பலவந்தமாக மேலதிக எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது பற்றி மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் தேவையான அளவு எரிபொருள் கை இருப்பில் இருப்பதாகவும் சகல எரிபொருள் நிலைய முகாமையாளர்களுக்கு இது பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் உலக நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நாம் கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அதனை கடந்து வந்தவர்கள். எனவே பொதுமக்கள் பதட்டப்படாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு விலையேற்றம் ஏற்படுமென பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களிலும் வரிசைகளில் நிற்பதை தொடர்ச்சியாக காத்திருப்பதை காண முடிகிறது.
இதேவேளை நகரில் பிரதான 2 எரிபொருள் நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் திரும்பிச் செல்வதை காண முடிகிறது. இதேவேளை பிரதான வீதிகளில் காணப்படுகின்ற எரிபொருள் நிலையங்களில் அதிக நெரிசல் காணப்படுவதுடன் போக்குவரத்து தடை ஏற்படுவதுடன் விபத்துக்கள் ஏற்பட காரணமாகவும் அமைகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

