தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வனிதாவாணி மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் க.மிருத்தனன் ஆகியோர் பழுகாமம் கண்டுமணி மாகாவித்தியாலயத்திற்கு கடந்த (22) நேரடி விஜயமொன்றை மேற்கொண்டனர்.
பழுகாம வட்டாரத்தின் பிரஜாசக்தி உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, பாடசாலையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் உள்ள சவால்கள்,நிலவும் கட்டிடத் தட்டுப்பாடுகள் மற்றும் புனரமைப்புத் தேவைகள்,தளபாடவசதிகள்,விளையாட்டு மைதானப்பிரச்சினை, மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், தேவைப்பாடு சம்பந்தமாக சுட்டிக்காட்டப்பட்டன.
இந்தக் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர், இவை தொடர்பான விபரங்களை உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
இச்சந்திப்பின் போது பாடசாலை அதிபர் கி.கிருஷ்ணதாசன், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பாடசாலையின் தேவைகளைத் தெளிவுபடுத்தினர்.

