வைத்தி்யர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை முதல் தீவிரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை  (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத் திட்டத்தின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாக உள்ளதுடன், நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த அறிக்கைகள் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்கு வழங்காமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் நேற்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, வைத்தியர்களுக்கென ‘இலங்கை மருத்துவ சேவை’ எனும் விசேட சேவையை உருவாக்குதல், போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் இடமாற்றக் கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதாக அமைச்சு உறுதியளித்திருந்தது. எனினும், அந்த உறுதிப்பாடுகளை மீறி சுகாதார அமைச்சு காலம் தாழ்த்தி வருவதால், நாம் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே பிரதான 6 பணிகளுடன் விலகியிருக்கு தொழிற்சங்க நடவடிகடகைகளை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (18) முதல் 7வது கட்டமாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கையும் ஆரம்பமாகவுள்ளது. இந்நாட்டின் சுகாதாரக் தரவுகளை சீராகப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், இனிவரும் நாட்களில் நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்குச் சமர்ப்பிக்க மாட்டார்கள்.

குறிப்பாக, நாளாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தடுப்பூசிப் பராமரிப்பு மற்றும் டெங்கு தொடர்பான தரவுகள், வாராந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தொற்றுநோய்கள் தொடர்பான அறிக்கைகள் , மாதாந்தம் மற்றும் காலாண்டு ரீதியாகச் சமர்ப்பிக்கப்படும் போசாக்கு மற்றும் சுகாதாரப் புள்ளிவிவர அறிக்கைகள் எதனையும் வழங்கப் போவதில்லை. இதனால் நாட்டின் சுகாதார நிலைமையை மதிப்பிட முடியாத சூழல் ஏற்படும்.

அரசாங்கம் வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தலைக்கணத்துடன் பதிலளிப்பதைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் படிப்படியாகத் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சேவை வீழ்ச்சிக்கும், இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். எமது கோரிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுமாயின், இப்போராட்டத்தை மேலும் தீவிரமான கட்டத்திற்குக் கொண்டு செல்ல நாம் தயங்க மாட்டோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *