இலங்கையர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள தேநீர் மற்றும் கோப்பி அருந்தும் பழக்கம், மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடும் என அண்மைய சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின்அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழ் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட 43 ஆண்டுகால நீண்டகால ஆய்வின்படி, தேநீர் அல்லது கோப்பியைத் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு, அது இல்லாதவர்களை விட ‘டிமென்ஷியா’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோய் ஏற்படும் அபாயம் 15 முதல் 20 சதவீதம் வரை குறைவாகக் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 2 முதல் 3 கோப்பை கோப்பி அல்லது 1 முதல் 2 கோப்பை தேநீர் அருந்துபவர்களுக்கே இந்த நன்மைகள் அதிகம் கிடைப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கெஃபைன் நீக்கப்பட்ட பானங்களை விட, கெஃபைன் உள்ள பானங்களே மூளை ஆரோக்கியத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேநீர் மற்றும் கோப்பியில் உள்ள ஒக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்கள் மூளை முதுமையடைவதைக் குறைப்பதுடன், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் தற்போது சுமார் 2 இலட்சம் பேர் நினைவாற்றல் இழப்பு நோயுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை முதிர்ச்சியடைந்து வருவதால், இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இலங்கையில் பல குடும்பங்கள் நினைவாற்றல் இழப்பை ஒரு நோய் என்று பாராமல், முதுமையின் தவிர்க்க முடியாத பகுதி என்றே கருதுகின்றனர்.
மேலும், இந்த ஆய்வுகள் நம்பிக்கையளித்தாலும், சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.
அளவுக்கு மிஞ்சிய கெஃபைன் தூக்கமின்மை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். இது மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.வெறும் தேநீர், கோப்பியுடன் மட்டும் நின்றுவிடாமல், உடற்பயிற்சி, தரமான தூக்கம், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்பாடு ஆகியவையும் நினைவாற்றலைப் பாதுகாக்க அவசியமானவை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தேநீருடன் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படும் விதம் மற்றும் நமது மரபணுக்கள் மாறுபட்டவை என்பதால், இலங்கையர்களுக்கு எனத் தனியான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு கப் தேநீர், அதன் வேதியியல் குணங்களால் மட்டுமன்றி, அது வழங்கும் சமூகத் தொடர்புகளாலும் மூளைக்கு புத்துயிர் அளிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

