தோனிக்கு 10 லட்சம் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை (சிடி) எழுத்து வடிவமாக்கி, மொழி பெயர்ப்பதற்கான கட்டணமாக ரூ.10 லட்சத்தை மார்ச் 12-ம் திகதிக்குள் செலுத்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் நிகழ்ந்த ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி வீரர் எம்.எஸ்.தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், மான நஷ்ட ஈடாக சம்பத்குமார் ரூ.100 கோடி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தோனி கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை (சிடி) எழுத்து வடிவமாக்கி மொழிபெயர்க்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் தோனிக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. அதற்கு தோனி தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 12-க்குள் செலுத்த வேண்டும்: இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்துள்ள உத்தரவு: பிரத்யேக மொழிபெயர்ப்பாளர், தட்டச்சரை நியமித்து, வழக்கு தொடர்பான குறுந்தகட்டை எழுத்து வடிவமாக்கி, மொழிபெயர்த்து நகல் எடுக்க அவகாசம் தேவை என்பதால், அதற்கான கட்டணமாக ரூ.10 லட்சத்தை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு தோனி மார்ச் 12-ம் திகதிக்குள் செலுத்த வேண்டும். எழுத்து வடிவில் மொழிபெயர்க்கும் பணிகளை மொழிபெயர்ப்பாளர், தட்டச்சர் ஆகியோர் மார்ச் 3-வது வாரத் துக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 12-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *