உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்!

மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நேற்று(08) இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான இணைப்பாளர் சுரேந்திரன் கலந்து கொண்டு ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார்.
மகா சிவராத்திரியினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் (17) திகதி கல்லடி கடற்கரையில் இடம்பெறவுள்ள பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனும் அவரது மகள் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் ஆகிய இருவரும் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சிக்கு ஆன்மீக பேச்சாளராக இந்தியா – திருவண்ணாமலையில் இருந்து தெய்வீக சகோதரி உமா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் 14, 15 மற்றும் 16 திகதிகளில் கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசன கண்காட்சி இடம் பெற்று அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதி பி.ப 6.30 மணி தொடக்கம் பி.ப 10.30 மணி வரைக்கும் இந்திய பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனும் அவரது மகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான தலைமையகம் இராஜஸ்தானிலும், உலகம் முழுவதும் 5000 கிளைகளைக் கொண்டுள்ளதுடன் 147 நாடுகளில் அதன் கிளைகள் வியாபித்துள்ளதுடன், இலங்கையில் அதிகமான மாவட்டங்களில் கிளைகள் நிறுவப்பட்டு தெய்வீக செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 25 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் தமது சேவையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *