தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எளிதில் வீழ்த்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியிடம் 159 ஆசனங்கள் இருப்பதால், அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி அரசு தன்னை மேலும் வலுப்படுத்திக்கொண்டு முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது” என்று அவர் உவமை கூறியதுடன், ஆட்சி கவிழ்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டாலும், யதார்த்த நிலையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். மறுபுறத்தில் எதிரணிகள் தங்களது கருத்துகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் முன்வைப்பது இயல்பான ஜனநாயக செயல்முறை என்றும் அவர் கூறினார்.
மேலும், கல்வி மறுசீரமைப்பு தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட அவர், தமது ஆட்சிக்காலத்திலேயே கல்வி மாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டதாக நினைவூட்டினார். நாட்டின் தேவைகளுக்கு பொருத்தமான கல்வி அமைப்பு உருவாக்கப்படுவது மிக அவசியம் என்றும், கல்வித் துறையில் அரசியல் தலையீடு இடம்பெறக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
கல்வி மறுசீரமைப்பு என்பது பொறுப்புடன், நீண்டகால நோக்குடன் செயல்படுத்த வேண்டிய முக்கிய தேசிய பணியாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

