அபாயகரமான எல்லையை தாண்டியது பூமி:விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பூமியின் வெப்பநிலை முன் இருந்த நிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், புவி வெப்பமாதல் 1.5 டிகிரி செல்சியஸை கடந்து, அபாயகரமான எல்லையைத் தாண்டியுள்ளதாகத் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக 2024இல் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

இத்தாலி மற்றும் தென் அமெரிக்காவில் கடுமையான வறட்சி, நேபாளம், சூடான் போன்ற நாடுகளில் உயிரைப் பறிக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவில் ஆயிரக்கணக்கானோரை வெப்ப அலைகள் பலிவாங்கியுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பேரழிவு தரும் சூறாவளிகள் ஏற்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்பட்ட வெப்ப அலைகள், தற்போது 2.8 மடங்கு அதிகமாக ஏற்படுகின்றதாகவும், இவை வழக்கத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பமாக இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதீத வெப்பம் காரணமாக காடுகளின் ஈரப்பதத்தை உறிஞ்சுபடுவதால், காட்டுத்தீ எளிதில் பரவுகிறது.

குறிப்பாக, கடந்த 2025 ஜனவரியில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 12 ஆயிரத்து 300 கட்டிடங்கள் தரைமட்டமாகிய சம்பவம் சுட்டிக்காட்டத்தக்கது. அதாவது, வளிமண்டலம் வெப்பமடைவதால் அது அதிக நீராவியைத் தக்கவைத்துக்கொள்கிறது.

அத்துடன், கடந்த 2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மூன்றாவது அதிக மழைப்பொழிவைக் கொண்ட ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் 30 நாட்களில் 06 சூறாவளிகள் தாக்கியமை நினைவில் கொள்ளத்தக்கது.

மேலும், அமெரிக்காவிலும் ஹெலன், மில்டன் போன்ற புயல்கள் அடுத்தடுத்துத் தாக்கியது பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் இன்னும் மோசமான நிலையை அடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *