விடுதலைப்புலிகளின் தலைவர் பூர்வீக இல்லக்காணியில் நூலகம்:நகர சபையின் முன்மொழிவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான நகர சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நகர சபையின் முன்மொழிவொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த காணியில் கட்டுமானத்தை அமைப்பதாக இருந்தால் முன்னர் இருந்த வீட்டின் தோற்றத்தை போன்ற வீட்டை அமைக்க வேண்டும் என கோர முடிவெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு நகர பிதா எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்ற போது இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான முயற்சியை வெளிநாட்டில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரி மதியாபாரணம் ஜெகதீஸ்வரி ஆரம்பித்துள்ளார்.

மேலும் இதற்கான அனுமதியை பெறுவதற்கு குறித்த காணிக்கான அற்றோணித்துவ தத்துவத்தை வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா அனந்தராஜ்க்கு வழங்கி அவர் ஊடாக வல்வெட்டித்துறை நகர சபைக்கு விண்ணப்பம் செய்தார்.

குறித்த விடயத்தின் முக்கியத்துவம் கருதி வல்வெட்டித்துறை நகர சபை அமர்வில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் ஒருவர்,

இதற்கு அனுமதி கொடுத்து சபை கெட்ட பெயர் வாங்க கூடாது. அந்த காணி உள்ளவரை அவ்வாறே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

அவ்வாறு அந்த காணியில் புதிய கட்டுமாணம் கட்டும் போது தலைவர் வீடு இருந்ததற்கான அடையாளம் இல்லாத நிலை ஏற்படும் அவ்வாறு செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் கருத்து தெரிவித்த உறுப்பினர் மயூரன், விண்ணப்பம் செய்த நபர்களிடம் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும். தலைவர் பிரபாகரனின் அடையாளமாக இருக்கிற அடையாளத்தை மாற்ற வேண்டாம்.

அவ்வாறு ஏதும் அமைக்க வேண்டுமாக இருந்தால் பழைய தலைவரின் வீட்டை போன்ற ஒரு புதிய வீட்டை அமைக்க வேண்டும். அந்த வீட்டுக்குள் காட்சிப்படுத்தல் வேலை செய்ய முடியும். குறித்த விடயத்தில் எங்களுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் ஒரு தார்மீக பொறுப்பு இருக்கின்றது என்றார்.

உள்நோக்குடன் குறித்து செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுப்பிய நகர பிதா எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயத்தில் எங்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் எதையும் செய்ய முடியாது என தெரிவித்தார். மேலும் குறித்த காணி தலைவர் பிரபாகரனின் தந்தையாரால் மூத்த மகளுக்கு சீதனமாக கொடுக்கப்பட்டது என்றார்.

நகர சபை சார்பில் வேண்டுகோளை அனுப்பலாமே தவிர சட்டபூர்வமான உரித்து எதுவும் எங்களுக்கு இல்லை. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் கூறிய விடயத்தை தீர்மானமாக எடுத்து முன்மொழிவாக அனுப்பலாம் என்றார்.

இறுதியாக விண்ணப்பதாரரிடம் சபை சார்பில் ஏகமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிவாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *