மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது – தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரின் மனைவியான ஆறுமுகம் மணியம்மா ஆகியோர் மீன் வாங்குவதற்கு புலையவெளி ஆற்றுக்கு வியாழக்கிழமை (29) காலை செல்லும் வேளையில் பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலிக்கு மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சார அதிர்ச்சியில் தமிழ்ச்செல்வி செல்வகுமார் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியில் விழுந்துள்ளனர். நீரில் விழுந்தவரை காப்பாற்றுமாறு ஆறுமுகம் மணியம்மா ஆற்றங்கரையில் நின்ற தனது கணவரை அழைத்துள்ளார்.

தமிழ்ச்செல்வி செல்வகுமார் நீருக்குள் இயங்கி செல்வம் கர்ணனை காப்பாற்ற முயற்சித்த போது அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை அயலவர்கள் உடனடியாக துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *