மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனைத் தடுக்கும் முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் ஒன்று கூடல் மண்டத்தில் நேற்று முன்தினம்(19) குறித்த செயலமர்வானது இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் மட்டக்களப்பில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் தற்கொலைகளைத் தடுப்பதற்கான செயற்திட்டங்களை சுகாதாரத் துறையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன், குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்த செயலமர்வில் சுகாதார துறைசார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

