யாழ் மாவட்ட மக்கள் தேவையற்ற செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு என பரவிய வதந்தியால் யாழ் மாவட்டத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று மாலை முதல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று எரிபொருள் நிரப்பினர்.
இது தொடர்பில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
இது மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இன்று செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலை உருவாகியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இன்று 6600 லீற்றர் கொள்ளளவுடைய 23 கொள்கலன்களில் 151,800 லீற்றர் பெட்ரோல் யாழ் மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்து வரப்பட்டு விநியோகிக்கப்படும். அண்மையில் காங்கேசன்துறையில் திறந்து வைக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு நிலையத்திலும் தேவையான எரிபொருள், எடுத்து வரப்பட்டு சேமிப்பதற்குரிய தேவையான சகல ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே யாழ் மாவட்ட மக்கள் தேவையற்ற செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால்,செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

