கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் 23 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கதிர்காமம் முதல் கண்டி ஊடாக குருநாகல் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து குறித்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
அந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்த குழு தயாரித்த அறிக்கையில் 24, 25 ஆம் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மோட்டார் வாகன சட்டத்தில் நான்கரை மணித்தியாலத்திற்குள் அரை மணித்தியாலத்திற்கும் குறைந்த நேரத்திற்குள் ஓய்வு எடுக்க வேண்டும்.
ஓய்வு நேரம் அரை மணித்தியாலத்திற்குக் குறையுமாயின் முழு நேரத்தையும் தொடர்ச்சியான நேரமாகக் கருத வேண்டும்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பேருந்து சாரதி வெலிமடையில் 15 நிமிடங்கள் மாத்திரமே ஓய்வு எடுத்துள்ளார்.
அதன்படி, விபத்து இடம்பெற்ற போது சாரதி ஆறரை மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் தொடர்ச்சியாகப் பேருந்தை செலுத்தியுள்ளார்.
எனவே மோட்டார் வாகன சட்டத்தின் மேற்குறிப்பிட்ட உறுப்புரையை சாரதி மீறியுள்ளதாக அந்தக் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணமாக அமைந்த வேறு விடயங்கள், இந்த விபத்துக்குக் காரணமான அனைத்திற்கும் சாரதி தனிப்பட்ட முறையில் பொறுப்புக்கூற முடியாது.
வீதியின் இருமருங்கிலும் வீதி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட காணியில் கடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் இந்த விபத்துக்குக் காரணம் எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியிலுள்ள வீதியின் இரு மருங்கிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பலகைகளிலான இரு கடைகள் காணப்படுகின்றன.
இந்த இரு கடைகளுக்கும் இடையில் 50 அடி தூரம் காணப்படுகின்றது. இந்த இரு கடைகளுக்கிடையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
வீதியின் இடது புறம் துப்பரவு செய்யப்பட்டு, வீதியின் ஓரத்திலிருந்த மண் மேடுகளை சீர்திருத்தி இந்தக் கடை நிர்மாணிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடைகள் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் அந்த இடத்தில் மண் மேடுகளும் சிறிய மரங்களும் இருந்ததைப் பழைய புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அந்த மண் மேடுகள் அங்கே இருந்திருந்தால், சிறிய மரங்கள் வளர்ந்திருந்தால், இந்த விபத்து இடம்பெற்றிருக்காது.
வீதி அபிவிருத்தி ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியில் முறையான கள ஆய்வு மற்றும் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இதுபோன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என விபத்து தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது