ஈரானியர்களுக்கு விசா கட்டுப்பாடு: அவுஸ்திரேலியாவின் புதிய தீர்மானம்!

ஈரானில் நிலவும் போர் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாகத் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) அறிவித்துள்ளார்.

ஈரானில் நிலவும் மோதல் காரணமாக, தற்காலிக விசாக்களில் அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அல்லது நாடு திரும்ப விரும்பாத நிலை ஏற்படலாம் என அவுஸ்திரேலிய அரசு கவலை வெளியிட்டுள்ளது.

இதனாலேயே இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானினால் ஏவப்பட்ட ஆளில்ல வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குத் தாம் இலக்காகியுள்ளதாக மத்திய கிழக்கின் பல நாடுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானியத் தாக்குதல்கள் பிராந்திய அமைதியை சீர்குலைத்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் குடிவரவு விதிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியா இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அவுஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் விசா நடைமுறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *