யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நீதியமைச்சரிடம் இன்று இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இது முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்தார்.
செம்மணி, சிந்துபாத்தி மயானத்திலிருந்து மூன்றுக்கும் மேற்பட்ட முழுமையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
எனவே, சர்வதேச சட்டங்களுக்கு அமைய, குறித்த இடம் மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அங்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அதேநேரம், அங்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான உரிய நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஆய்வுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியும் போதுமானதாக இல்லை. அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் அவர்கள் அந்த பணியை இடைநிறுத்தி விடுவார்கள்.
தேவையாயின் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் ஆய்வு பணிகளுக்கான நிதியுதவியைப் பெற்றுத்தர முடியும்.
எனவே, குறித்த இடத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துவதுடன், தேவையான ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் எனவும், போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் கோருவதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.